tamilnadu

img

கம்யூனிஸ்ட்டுகளும் ஜனநாயகத்திற்கான போராட்டமும்!...

இந்தியா 1947ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற பொழுது பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் மிகவும் பின்தங்கிய தேசமாக இருந்தது. 200 ஆண்டுகள் காலனியாதிக்கம் காரணமாக  மேலும் பின்னோக்கிச் சென்றிருந்தது. அந்த சமயத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னால் இருந்த மிக முக்கியமான கடமை என்னவென்றால் நிறைவு பெறாத ஜனநாயகப் புரட்சியை நிறைவு அடையச் செய்வதாகும். இந்திய தேசத்தை ஜனநாயக அடிப்படையில் மாற்றுவது என்பது அரசியல், பொருளாதார, சமூக அம்சங்கள்  ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியதாகும். 

முதலாளித்துவ கட்சிகளைப் போல அல்லாமல் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜனநாயகம் என்பது வாக்களிக்கும்உரிமையுடன் கூடிய வெறும் தேர்தல் ஜனநாயகம் மட்டும் அல்ல! அது மட்டுமே முழுமையான ஜனநாயகமாக இருக்கஇயலாது. உண்மையான ஜனநாயகம் என்று சொன்னால்வர்க்கச் சுரண்டல் மற்றும் சமூக அடக்குமுறை காரணமாக உருவாகியுள்ள பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மையை நீக்குவது என்று பொருளாகும்.  பொருளாதார, சமூக சமத்துவம் இல்லாமல் ஜனநாயகம் என்பது உண்மையானதாக இருக்க முடியாது. டாக்டர் அம்பேத்கர் அவர்கள் மிகக் கூர்மையாகச் சுட்டிக்காட்டியது போல “பொருளாதார, சமூக சமத்துவம் இல்லையெனில் இந்தியாவில் ஜனநாயகம் என்பது மிக மிக மேலோட்டமான ஒன்றாகவே இருக்கும். அது ஜனநாயக மறுதலிப்புக்குச் சமமானது.”

சுதந்திர இந்தியாவின் தொடக்கத்திலிருந்தே முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்க ஆட்சியின் காரணமாக குறுகியும் சிதைந்தும் இருந்த ஜனநாயகத்தை அகலப்படுத்தவும் ஆழப்படுத்தவும் கம்யூனிஸ்ட்டுகள் கடுமையாக உழைத்தனர். ஜனநாயகத்துக்கான இந்த போராட்டத்தின் முக்கிய அம்சங்கள் என்னவென்றால் நில உறவுகளை ஜனநாயக மாற்றத்திற்கு உள்ளாக்கும் நிலசீர்திருத்தம்/ மொழி அடிப்படையில் மாநிலங்களை உருவாக்குவது/ பஞ்சாயத்து அமைப்புகள் உட்பட உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிகாரப் பரவல்/ மற்றும் மக்களின் ஜனநாயக உரிமைகளை குறிப்பாக உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை தொய்வில்லாமல் பாதுகாப்பது ஆகியவை அடங்கும்.

ஜனநாயகத்தை ஆழப்படுத்திட நிலச்சீர்திருத்தம்
சுதந்திரத்தின் பொழுது ஒருசில ஜமீன்தார்கள் மற்றும் நிலப்பிரபுக்கள் கையில் ஏராளமான நிலங்கள் குவிந்திருந்தன. முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ வர்க்கக் கூட்டணி கையில் அரசு அதிகாரம் இருந்த காரணத்தால் காங்கிரஸ் அரசாங்கம் நிலப்பிரபுத்துவத்தை அகற்றுவதற்கான முயற்சிகளை எடுக்க விரும்பவில்லை. பெயரளவுக்கான சில நிலச்சீர்திருத்தங்களை காங்கிரஸ் அரசாங்கம் அமலாக்கியது. இது நிலப்பிரபுத்துவத்தை அகற்றுவதற்குப் பதிலாக நிலப்பிரபுக்களுக்கும் பணக்கார விவசாயிகளுக்கும் நன்மை பயத்தது. ஜமீன்தாரி முறை ஒழிக்கப்பட்ட பின்னரும்கூட பழைய ஜமீன்தார்கள் கைகளில் ஏராளமான நிலங்கள் குவிந்து இருந்தன. 1954ஆம் ஆண்டு நடந்த முதல் தேசிய மாதிரி ஆய்வு 3.7 சதவீதம் குடும்பங்கள் 37 சதவீத நிலங்களை தம் வசம் வைத்திருந்தன என்பதை வெளிப்படுத்தியது. இதுவே குறைந்த மதிப்பீடுதான்!

நிலப்பிரபுத்துவத்தை பலவீனப்படுத்த நிலச் சீர்திருத்தம் ஒரு அடிப்படையான முழக்கம் என்பதை கம்யூனிஸ்ட் கட்சி மதிப்பிட்டது. நிலச்சீர்திருத்தம் மூலம்தான் நில உறவுகளில் ஒரு ஜனநாயக மாற்றத்தை கொண்டு வரமுடியும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாடு ஆகும்.நிலச்சீர்திருத்தத்திற்கான போராட்டம் என்பது உபரி நிலங்களை நிலமற்ற ஏழைகளுக்கு பிரித்துக் கொடுப்பது/ நிலங்களிலிருந்து விவசாயிகள் பலவந்தமாக வெளியேற்றப்படுவதை தடுப்பது/ விளைச்சலில் குத்தகை விவசாயிகளின் பங்கை அதிகரிப்பது ஆகிய கோரிக்கைகளின் அடிப்படையில் தேசத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் உருவாயின.

கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை முழக்கமான நிலச்சீர்திருத்தம் குறித்து மிக முக்கியமான முதல் சாதகமான நகர்வு கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அரசாங்கம் அமைக்க தேர்ந்தெடுக்கப்பட்ட பொழுது முன்வந்தது. கேரளாவில் அமைக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் நிலச்சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் விவசாயிகள் நிலப்பிரபுக்களால் வெளியேற்றப்படுவது சட்டத்தின் மூலம் தடுக்கப்பட்டது. ஒரு சிறிய இழப்பீட்டை நிலப்பிரபுக்களுக்கு தருவதன் மூலம் நிலம் விவசாயிகளுக்கு சொந்தமாக ஆக்கப்பட்டது. இது நிலப்பிரபுக்களையும் அவர்களை ஆதரித்த மாநில, அகில இந்திய அரசியல் தலைவர்களையும் கோபப்படுத்தியது. கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட தோழர் இ.எம்.எஸ் நம்பூதிரிபாட் அவர்கள் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசாங்கம் நீக்கப்பட்டதற்கு பல காரணங்கள் இருந்தன. அவற்றில் நிலச் சீர்திருத்தச் சட்டமும் ஒரு முக்கியமான காரணமாகும்.

நிலத்துக்கான அடுத்த போராட்ட அலை 1967 முதல் 1969 வரை மேற்குவங்கத்தில் நடந்தது. முதல் ஐக்கிய முன்னணி அரசாங்கம் அங்கு அமைந்த பொழுது நிலப்பிரபுக்கள் வசம் இருந்த பினாமி நிலங்களை கைப்பற்றுவதற்கான பெரிய போராட்டங்கள் நடந்தன. பிறகு 1977 ஆம் ஆண்டு இடது முன்னணி அரசாங்கம் ஆட்சியில் அமர்ந்த பொழுது நிலச்சீர்திருத்தத்துக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க சட்டங்கள் இயற்றப்பட்டன. இந்த சட்டத்தின் மூலம் விளைச்சலில் 75 சதவீதம் குத்தகை விவசாயிக்கு கிடைத்தது. மேலும் அவர்கள் நிலப்பிரபுக்களால் வெளியேற்றப்படுவது தடுக்கப்பட்டது. 12 லட்சம் ஏக்கருக்கும் அதிகமான  நிலங்கள் 25 லட்சம் நிலமற்ற மற்றும் விளிம்புநிலை விவசாயிகளின் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.

மேற்குவங்காளம்/ கேரளா/ திரிபுரா ஆகிய மாநிலங்களில் இடதுசாரி தலைமையின் கீழ் உருவான அரசாங்கங்கள் நிலச் சீர்திருத்தத்தை அமலாக்கின. இந்த மகத்தான செயல் கிராமப்புற உறவுகளில் ஒரு கணிசமான முக்கியமான மாற்றத்தை உருவாக்கியது. இந்த மூன்று மாநிலங்களில் கம்யூனிஸ்ட் அரசாங்கங்கள் ஆட்சி செய்த காரணத்தினால்தான் நிலச் சீர்திருத்தங்கள் அமலாக்கப்பட்டன.  இது மற்ற மாநிலங்களில் நடக்கவில்லை.சுதந்திரத்திற்குப் பிறகு கட்சியும் விவசாய சங்கமும் பீகார்/ ஆந்திரப் பிரதேசம்/ கர்நாடகா/ மகாராஷ்டிரா மற்றும் பல இடங்களில் நிலத்திற்கான போராட்டத்தை பலஆண்டுகள் தொடர்ந்து நடத்தின. இந்தப் போராட்டங் களின் தாக்கம் காரணமாகவும் மூன்று இடதுசாரி மாநிலஅரசாங்கங்கள் உருவாக்கிய முன்னுதாரணம் காரணமாகவும் தேசத்தின் ஏனைய பகுதிகளில் ஒரு வரையறைக்கு உட்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் அமலாக்கப்பட்டன. குறிப்பாக 1970 மற்றும் 1980களின்தொடக்கத்தில் இது நடந்தது. இவ்வாறாக கிராமப்புறஉறவுகளில் ஒரு ஜனநாயக மாற்றத்தை உருவாக்கு வதற்கான போராட்டத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் மிக முக்கியப் பங்கை ஆற்றியது. இந்த ஜனநாயக பிரச்சனையில் குறைந்தபட்சம் மூன்று மாநிலங்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் வெற்றியை சாதித்தது.

கூட்டாட்சிக்கு அடிப்படையாக மொழிவாரி மாநிலங்கள் அமைப்பு
நாடு விடுதலை அடைந்த பொழுது பிரிட்டிஷ் நிர்வாகத்தின் கீழ் பல மொழிகளை பேசும் மூன்று பெரிய பிரதேசங்களும் மன்னர் ஆட்சியின் கீழ் பல பகுதிகளும் இருந்தன. விடுதலைப் போராட்டத்தின் பொழுது மிக முக்கிய இலக்கு என்னவென்றால் மொழி- தேசியம் என்ற கொள்கையின் அடிப்படையில் மொழிவாரி மாநிலங்களை உருவாக்குவது என்பதாகும். 1920 காலகட்டத்திலேயே காந்திஜியின் முன்முயற்சி அடிப்படையில் காங்கிரஸ் கட்சி மொழிவாரி அடிப்படையில்தான் தனது கமிட்டிகளை அமைத்திருந்தது. விடுதலைக்குப் பிறகு மொழிவாரி மாநிலங்கள் அமைக்கப்படும் என காங்கிரஸ் வாக்குறுதிதந்திருந்தது. ஆனால் விடுதலைக்குப் பிறகு நேருஅரசாங்கம் வாக்குறுதியை நிறைவேற்ற முன்வரவில்லை. பெரு முதலாளிகளும் அவர்களைப் பிரதிநித்துவப்படுத்தும் பல அமைப்புகளும் மொழிவாரி மாநிலங்களை விரும்பவில்லை. ஒரே சந்தை எனப்படும் தமது தேவைக்கு மொழிவாரி மாநிலங்கள் இடையூறாக இருக்கும் என முதலாளிகள் வாதிட்டனர்.விடுதலைக்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சி தனது தேசிய இனக் கொள்கையை தெளிவாக முன்வைத்தது. அதில் மொழிவாரி தேசியக் கொள்கையை அங்கீகரித்தது. மொழிவாரி அடிப்படையிலான மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியா இருக்க வேண்டும் என்பது கம்யூனிஸ்ட் கட்சியின் குறிக்கோள் ஆகும்.
இந்திய அரசின் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவதில் கூட்டாட்சியின் பின்னணியில் மொழிவாரி மாநிலங்கள் அமைவது என்பது மிக முக்கிய நகர்வு ஆகும். நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் ஜனநாயகக் கடமையில் மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கம் என்பது  மிக அவசியம் என கம்யூனிஸ்ட் தலைவர்கள் தெளிவான நிலைபாடு கொண்டிருந்தனர். சென்னை பிரதேசத்தில் இருந்த மலபார் பகுதியும் கொச்சி - திருவாங்கூர் பகுதிகளையும் இணைத்து ஒன்றேகால் கோடி மலையாள மொழியை பேசும் மக்களின் உரிமையாக அவர்களுக்கு  ஒரு மாநிலம்அமைய வேண்டும் என தோழர் இ.எம்.எஸ். ஒரு பிரசுரத்தைவெளியிட்டார். 1946ஆம் ஆண்டு தோழர் சுந்தரய்யா அவர்கள் விசாலாந்திரா எனும் கோட்பாடை விளக்கி ஒரு பிரசுரம் வெளியிட்டார். இந்த பிரசுரம் விசாலாந்திரா இயக்கத்தில் மிகப்பெரிய தாக்கத்தை உருவாக்கியது. சோம்நாத் லாகிரி “நட்டுன் பங்களா” எனும் பிரசுரத்தை வெளியிட்டார். இது வங்காள மொழி பேசும் மக்களின் மாநிலம் உருவாக்கும் இயக்கத்தில் தாக்கம் உருவாக்கியது.மொழிவாரி மாநிலங்கள் எனும் கோட்பாடை மத்திய அரசாங்கம் மறுத்து வந்தது. இதனால் விசாலாந்திரா/ ஐக்கிய கேரளம்/ சம்யுக்தா மகாராஷ்ட்ரா/ மகா குஜராத்/ பஞ்சாபி சுபா ஆகிய இயக்கங்கள் வலுவடைந்தன. கம்யூனிஸ்ட் கட்சி இந்த இயக்கங்களில் முக்கியப் பங்கை ஆற்றியது.

பெரு முதலாளிகள் மற்றும் ஆர்.எஸ்.எஸ். ஒரே மையப்படுத்தப்பட்ட அரசு கட்டமைப்பை விரும்பின. மொழிவாரி மாநிலங்களை எதிர்த்தனர். இந்த எதிர்ப்பையும் மீறி மொழிவாரி மாநிலங்களுக்கான போராட்டம் வெற்றி பெற்றது. இன்றைக்கு உள்ள மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் இந்திய ஒன்றியம் என்பது குறிப்பிடத்தக்க சாதனையாகும். இதில் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பெருமை மிகு பங்கு உண்டு. இந்திய அரசு என்பது கூட்டாட்சித் தத்துவம் என்பதற்கும் மாநிலங்களின்உரிமைகள் அவசியம் தேவை எனும் கருத்தாக்கத்துக்கும் மொழிவாரி மாநிலங்களுக்கான போராட்டம் அடித்தளத்தை உருவாக்கியது.

அதிகாரப் பரவல்
மாநிலங்களின் உரிமைகளுக்காக போராடியது மட்டுமல்லாமல் கம்யூனிஸ்ட்டுகள் பஞ்சாயத்து மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கும் அதிகாரப் பரவல் செய்யப்பட வேண்டும் எனவும் கோரினர். கம்யூனிஸ்ட்டுகள் ஆட்சிசெய்த மாநிலங்களில் இது அமல்படுத்தப்பட்டது. மேற்கு வங்கத்தில் இடதுசாரி அரசாங்கம் மூன்றடுக்கு பஞ்சாயத்துமுறையை உருவாக்கி அதிகாரங்கள் மற்றும் நிதி ஆதாரங்களை பரவலாக்கியது. அரசியல் சட்டத்தின்  73 மற்றும் 74 ஆவது திருத்தங்கள் செய்யப்படுவதற்கு 10 ஆண்டுகளுக்கு முன்பே மேற்கு வங்கத்தில் இந்த அதிகாரப் பரவல் அமலாக்கப்பட்டது. திரிபுராவிலும் கீழ்மட்டத்தில் இருந்து ஜனநாயகத்தை உத்தரவாதப்படுத்த பஞ்சாயத்து ஆட்சி முறைகள் உருவாக்கப்பட்டன. மேலும் அங்குள்ள பழங்குடியின மக்களுக்கு அதிகாரப் பரவலாக்கல் உருவாக்க அவர்களுக்கு சுய அதிகாரம் கொண்ட மாவட்டக் கவுன்சில் அமைப்புகள் உருவாக்கப்பட்டன. கேரளாவில் இடது ஜனநாயக அரசாங்கம் 1996 ஆம் ஆண்டு ஒரு தனித்துவமான அதிகாரப் பரவல் முறையை உருவாக்கியது. “மக்கள் திட்டங்கள்” எனப்படும் வழி
முறைகள் மூலம் கிராம சபைகள் மற்றும் நகரத்தில் வார்டுகள் உட்பட மக்கள் பங்கேற்று தாம் வாழும் பகுதிகளுக்கு தாங்களே திட்டங்களை உருவாக்கும் அதிகாரப் பரவல் திட்டங்கள் கட்டமைக்கப்பட்டன.

ஜனநாயகப் பாதுகாப்பும் புதிய ஆபத்துகளும்
கம்யூனிஸ்ட் கட்சி தொடக்கத்திலிருந்தே ஜனநாயக முறையை பரவலாக்கவும் ஆழப்படுத்தவும் கடுமையாக முயற்சி செய்தது. இதற்காக இரண்டு தளங்களில் கட்சி இயங்கியது. முதல்தளத்தில் நாடாளுமன்ற முறைகள்மற்றும் அரசியல் சாசன ஜனநாயக நடைமுறைகள் வலுப்படுத்துவதற்கு கட்சி பாடுபட்டது. இரண்டாவதாக மக்களின் ஜனநாயக உரிமைகளையும் குடியுரிமைகளையும் நசுக்கும் கொடூரமான சட்டங்களை எதிர்த்து கட்சி போராடியது. ஜனநாயக உரிமைகளை பாதுகாப்ப தற்கு இடைவிடாது மிகக் கடுமையாக செயல்பட்டது.

ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டத்தை நடத்தும் பொழுது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எப்பொழுதுமே கட்சித் திட்டம் முன்வைக்கும் கீழ்க்கண்ட எச்சரிக்கையை கருத்தில் கொள்கிறது.“நாடாளுமன்ற ஜனநாயகத்துக்கு ஆபத்து உழைக்கும் மக்களிடமிருந்து அல்லது அவர்களின் நலன்களை பிரதிநித்துவப்படுத்தும் கட்சிகளிடமிருந்து வருவதுஇல்லை. இந்த ஆபத்து சுரண்டும் வர்க்கங்களிட மிருந்துதான் வருகிறது. அவர்கள்தான் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் நாடாளுமன்ற முறையை சிதைக்கின்றனர். தங்களுடைய குறுகிய நலனுக்காக அதனை ஒரு கருவியாகப் பயன்படுத்த முனைகின்றனர். உழைக்கும் மக்கள் தங்களுடைய நலனுக்காக நாடாளுமன்ற அமைப்புகளை பயன்படுத்த முற்படும் பொழுதும் பெரு முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ செல்வாக்கில் இருந்து அகன்று அவர்கள் வெளியேற  முயலும் போதும் இந்த வர்க்கங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தை தங்கள் காலில் போட்டு நசுக்குவதற்கு தயங்குவது இல்லை”

முதலாளித்துவத்தின் கீழ் ஜனநாயகம் எப்பொழுதுமே சிதைக்கப்படுவதற்கான முயற்சி நடக்கிறது. இந்த ஆபத்து நவீன தாராளமய பொருளாதார கொள்கைகளை அமல்படுத்தும் ஆட்சிகளின் காலத்தில் மிகத் தீவிரமாக அதிகரித்துள்ளது. அரசியல் சட்டத்தில் தரப்பட்ட பல உரிமைகள் மறுக்கப்படுகின்றன அல்லது காலில் போட்டுமிதிக்கப்படுகின்றன. குறிப்பாக தொழிலாளர்கள்/ விவசாயிகள் ஏனைய பகுதி உழைப்பாளிகள் போராடும்போது இது அதிகமாக நடக்கிறது. கூட்டம் கூடுவதற்கான உரிமை கூட தடைச் சட்டங்கள் மூலம் மறுக்கப்படுகின்றன. காவல்துறை மற்றும் ஏனைய அரசு அடக்குமுறை கருவிகள் உழைப்பாளிகளுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்படுகின்றன. தடுப்புக்காவல் சட்டமும் ஏனைய ஆள்தூக்கி சட்டங்களும் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டா ளற்களை கைது செய்ய பயன்படுத்தப்படுகின்றன.
விடுதலைக்குப் பிறகு பல ஆண்டுகள் ஆன பின்னரும் கம்யூனிஸ்ட்டுகள் தொழிலாளி வர்க்கம் மற்றும் ஏனைய உழைப்பாளி மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராட வேண்டிய தேவை ஏற்பட்டது. இதன் காரணமாக அரசு அடக்குமுறைகளுக்கு  ஆளானார்கள். ஆள் தூக்கி சட்டங்களான மிசா(MISA)/தேசிய பாதுகாப்பு சட்டம்(NSA)/தடா(TADA)/பொட்டா(POTA) /உப்பா(UAPA) ஆகிய கொடூரமான சட்டங்களை எதிர்த்து கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. 1975ஆம் ஆண்டு இந்திரா காந்தி அவசர நிலையை பிறப்பித்தார். ஆளும் வர்க்கங்களின் குறுகிய நலனுக்காக ஜனநாயகம் எப்படி நசுக்கப்படும் என்பதற்கு இது ஒரு வலுவான உதாரணமாக அமைந்தது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அவசர காலத்தை எதிர்த்துப் மிகக் கடுமையாக போராடியது. நூற்றுக் கணக்கான ஊழியர்கள் அந்த காலகட்டத்தில் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானவர்கள் சிறை களில் அடைக்கப்பட்டனர்.

மக்கள் ஒன்று கூடுவதற்கான உரிமையை அல்லது அமைதியான முறையில் எதிர்ப்பைத் தெரிவிக்கும் உரிமையை அல்லது தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை பயன்படுத்த முடியவில்லை என்றால் ஜனநாயகம் அர்த்தமற்றதாகிவிடும். இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகளின் தீவிரமான தொடர் போராட்டங்கள் காரணமாகவே சில ஆள்தூக்கிச் சட்டங்கள்தொடராமல் போயின! எனினும் தேசிய பாதுகாப்புச் சட்டமும் உப்பா சட்டமும் இன்றும் பரவலாக பயன்படுத்தப்படுகின்றன. பாஜக அரசாங்கம் இந்த சட்டங்களை மேலும் கொடூரமாக்கி உள்ளது.

அரசியல் சட்டத்தில் உள்ள சில பிரிவுகள் ஜனநாயகத்தை ஒடுக்க தவறாக பயன்படுத்தப்படுகின்றன. அதில் முக்கியமானது 356ஆவது பிரிவு ஆகும். இந்தப் பிரிவு ஆளுநரின் அறிக்கையின் அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மாநில அரசாங்கத்தை ஜனாதிபதி டிஸ்மிஸ் செய்வதற்கு வழி வகுக்கிறது. இந்தப் பிரிவைப்பயன்படுத்திதான் 1959ஆம் ஆண்டு கேரளாவில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அகற்றப்பட்டது. மேற்கு வங்கத்திலும் ஏனைய மாநிலங்களிலும் ஜனாதிபதி ஆட்சியை திணிப்பதற்கு இந்த பிரிவு பல முறை பயன்படுத்தப்பட்டுள்ளது. 356ஆவது பிரிவு மாநில உரிமைகளுக்கும் ஜனநாயகத்துக்கும் எதிரான கடுமையான தாக்குதல் ஆகும். இந்த பிரிவுக்கு எதிராக மக்களின் கருத்தையும் ஜனநாயக சக்திகளின் எதிர்ப்பை திரட்டுவதற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு மிக முக்கியப் பங்கை ஆற்றியது.

நமது கட்சி மற்றும் ஜனநாயக சக்திகளின் தொடர் பிரச்சாரம் காரணமாக இறுதியில் 1994ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் எஸ்.ஆர். பொம்மை வழக்கில் தீர்ப்பு கூறியது. இந்த தீர்ப்பு 356ஆவது பிரிவை பயன்படுத்துவதற்கு சில வரையறைகளை உருவாக்கியது. மேலும் 356ஆவது பிரிவை பயன்படுத்துவது என்பது நீதித்துறையின் மறுபரீசீலனைக்கும் உட்படுத்தப்பட்டது.கம்யூனிச இயக்கம் வளர்வதையோ அல்லது முன்னேறுவதையோ ஆளும் வர்க்கங்கள் ஒருபோதும் பொறுத்துக் கொள்வதில்லை. அதேபோல இடதுசாரி தலைமையிலான மாநில அரசாங்கங்களையும் ஆளும் வர்க்கங்கள் விரும்புவது இல்லை. இதனால்தான் மேற்கு வங்கத்தில் 1971- 77 காலகட்டத்திலும் திரிபுராவில் 1988 -1993 காலத்திலும் நமது இயக்கம் அரைப் பாசிச பயங்கரத்தை சந்தித்தது. ஜனநாயகத்தின் மீதான தாக்குதலும் பயங்கரமும் அந்த இரண்டு மாநிலங்களிலும் மீண்டும் தோன்றியுள்ளது. மிகக் கொடூரமான முறையில் தோன்றியுள்ளது! மேற்கு வங்கத்தில் திரிணமூல் ஆட்சியும் திரிபுராவில் பாஜக ஆட்சியும் அத்தகைய கொடூரமான தாக்குதலை இடதுசாரிகள் மீது ஏவியுள்ளனர்.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் மீது ஆளும் வர்க்கங்கள்தான் தாக்குதலை தொடுக்கும் எனும் நமது கட்சி திட்டத்தின் எச்சரிக்கை இதன் மூலம் உறுதியாகிறது. எப்பொழுதெல்லாம் உழைக்கும் மக்கள் தமது நலனுக்காகநாடாளுமன்ற அமைப்புகளை பயன்படுத்த முனைக்கிறார்களோ அப்போதெல்லாம் ஆளும் வர்க்கங்கள் நாடாளுமன்ற ஜனநாயகத்தைன் சிதைக்க முயல்கின்றனர். அதனால்தான் மேற்குவங்கம் திரிபுரா மற்றும் ஒட்டுமொத்த தேசத்திலும் கம்யூனிச இயக்கம் ஜனநாயகத்தையும் ஜனநாயக உரிமைகளையும் பாதுகாக்க தொடர்ந்து போராடி வருகின்றது.

இந்துத்துவா சர்வாதிகார ஆட்சி அமைந்த பிறகு ஜனநாயகத்தைப் பாதுகாப்பதற்கான போராட்டம் இன்னும் கூடுதலான முக்கியத்துவம் பெற்றுள்ளது.  கடந்தஆறு ஆண்டுகளில் ஜனநாயகத்தை பாதுகாப்பதும் அரசியல் சட்டம் தரும்  உரிமைகளைப் பாதுகாப்பதும்  நமதுபோராட்டத்தின் மையமான அம்சமாக முன்வந்துள்ளது.அரசின் வர்க்கத் தன்மை எப்படி உருவாகியுள்ளது என்றால் பெரு நிறுவனங்களுக்கும் கிராமப்புறப் பணக்காரர்களுக்கும் செல்வத்தை அட்டை போல உறிஞ்சும் முதலாளித்துவ சக்திகளுக்கும் நாடாளுமன்ற ஜனநாயகம் ஒரு விளையாட்டு மைதானம் போல ஆகிவிட்டது. நவீன தாராளமயக் கொள்கைகளின் கீழ் பெருவணிகமும் அரசியலும் பிரிக்க முடியாத சக்திகளாக ஒன்றுக்குள் ஒன்று பின்னிப்பிணைந்துள்ளன.பணபலம் ஜனநாயகத்தை சிதைப்பதும் கார்ப்பரேட்டுகளும் நிதி மூலதனமும் தரும் பணம் தேர்தல் முறைக்குள் வெள்ளமென பாய்வதும் பெரும் ஆபத்துகளாக உருவாகியுள்ளன. அந்நிய மற்றும் இந்திய கார்ப்பரேட்டுகள் அரசியல் கட்சிகளுக்கு நிதி உதவியை தரும் விதத்தில் மோடி அரசாங்கம் சட்டங்களை திருத்தி உள்ளது. அவ்வாறு தரப்படுகின்ற நிதி எவரிடமிருந்து வந்தது என்பதை தெரிந்துகொள்ள முடியாத அளவிற்கு தேர்தல் பத்திரங்கள் முறை உருவாக்கப்பட்டுள்ளது.

பா.ஜ.க.வின் எதேச்சதிகார ஆட்சியில் ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள கொடும் தாக்குதல் மிகப்பெரிய ஆபத்தாகும்! ஏனெனில் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒன்று அல்லது இரண்டு உரிமைகளை நசுக்குவதற்கு பா.ஜ.க. அரசாங்கம் முயலவில்லை! மாறாக அரசியல் சட்டம் முழுவதையும் அனைத்து ஜனநாயக அமைப்புகளையும் ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு பாஜக முயல்வது நிகழ்ந்து கொண்டுள்ளது.  இதன் நோக்கம்  பெரும்பான்மை இந்துத்துவா அரசை அமைப்பது ஆகும்.

சவாலை எதிர் கொள்ள...
நிலச்சீர்திருத்தத்திற்கான போராட்டம்/கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படையில் இந்திய அரசின் கட்டமைப்பை ஜனநாயகப்படுத்துவது/ மொழிவாரி மாநிலங்கள் அமைய இயக்கங்கள்/ ஜனநாயகத்தை ஆழப்படுத்துவதற்கான  தொடர்ச்சியான போராட்டங்கள்/அதற்காக ஆளும் வர்க்கங்களின் ஒடுக்குமுறையை சந்தித்தது இவையெல்லாம் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளமான பாரம்பரியம் ஆகும். இந்தப் பாரம்பரியத்தை நாம் முன்னெடுத்து செல்ல வேண்டியுள்ளது.

கட்டுரையாளர்  : பிரகாஷ் காரத், அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)

தமிழில் : அ. அன்வர் உசேன்